புதுச்சேரி

சூதாட்டம், கேளிக்கையுடன் கூடிய சொகுசு கப்பல் பயணத்துக்கு புதுச்சேரி அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன்,

 “புதுச்சேரியில் சுற்றுலா என்ற பெயரில் ஏற்கனவே கலாச்சார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. கடற்கரை பகுதிகள் சுற்றுலா பயணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சூதாட்டம் கேளிக்கை நிகழ்வுகளுடன், கூடிய சுற்றுலா சொகுசு கப்பல் வருகிற 4 ஆம் தேதி முதல் புதுச்சேரியில் துவக்கப்பட உள்ளது. 1400 பேர் பயணிக்க கூடிய இந்த சொகுசு கப்பல், வைசாக், சென்னை, வழியாக புதுச்சேரி துறைமுகப் பகுதிக்கு வருகிறது. 

கப்பலில் வரும் சுற்றுலா பயணிகளை படகுகள் மூலம் அழைத்து வரப்பட்டு புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்ட பிறகு மீண்டும், புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளுடன் புறப்படுவதற்கான ‌ஏற்பாடுகளை துறைமுகத்துறையும் சுற்றுலா துறையும் செய்து வருகிறது. ’

சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரிக்கு அனுமதிக்கப்பட்டால், ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் மையமாக இருக்கும் புதுச்சேரி, மீண்டும் அதிக அளவில் போதைப்பொருள் விற்பனை மையமாக திகழும் என்கிற அச்சம் எழுகிறது.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்க கூடிய சொகுசு கப்பல் பயணத்தை புதுச்சேரி அரசு தடை செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், மீனவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.”

என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.