வேலூர்: ஊராட்சி பொது நிதியில் இருந்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,500 ஊதியம் வழங்க ஊரக வளர்ச்சி இயக்குநரகம் உத்தவிட்டு உள்ளது. இதன் மூலம் ஏற்கனவே ரூ.5ஆயிரம் ஊதியம் வாங்கும் மக்கள் நலப்பணியாளர்களின் ஊதியம் ரூ.7500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
கடந்த திமுக ஆட்சியின்போது கிராம ஊராட்சிகளில் நியமிக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களை அடுத்து வந்த அதிமுக ஆட்சி நீக்கி நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து அவர்கள் 8.11.2011ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் பணி வழங்கப்படாத நிலையில், திமுக ஆட்சிக்கு வந்ததும், அவர்களுக்கு பணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சட்டமன்றத்தில் கடந்த 8.04.2022 அன்று பேசிய முதல்வர் ஸ்டாலின், மாநிலத்தில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தில் விருப்பம் தெரிவிக்கும் முன்னாள் மக்கள் நலப்பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, விருப்பம் தெரிவித்த மக்கள் நலப்பணியாளர்கள் திட்டப்பணி ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மதிப்பூதியம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்த ஊதியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிர்வாக தலைப்பில் இருந்து வழங்கப்படும். அத்துடன், மக்கள் நலப்பணியாளர்கள் ஏற்கனவே கிராம ஊராட்சி பணிகளில் பணியாற்றியதை கருத்தில் கொண்டு அவர்களை அப்பணிகளை கூடுதலாக கவனிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதற்காக மாதந்தோறும் ஊராட்சி பொது நிதியில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 கூடுதலாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பூதியமாக கிடைக்கும்.
இதுதொடர்பாக அனைத்து கலெக்டர்களுக்கும் ஊராட்சிகள் இயக்குநரகம் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.