சென்னை: குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற வருகிற ஜூலை மாத இறுதியில் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து ஜூலை மாதம் 17ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது.
பாஜக சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆந்திரா, தெலுங்கான, தமிழ்நாடு உள்ளிட்ட மாநில முதல்வர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசினார்.
மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஆதரவு கோரியிருந்தார். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.