டெல்லி: இன்று அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, துணைகுடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் இன்று காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இன்று மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பாஜக தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “காந்தி ஜெயந்தி என்பது மனித வரலாற்றின் போக்கை மாற்றியமைத்த அன்பான காந்தியின் அசாதாரண வாழ்க்கைக்கு அஞ்சலி செலுத்துவதாகும். துணிச்சலும், எளிமையும் எவ்வாறு பெரிய மாற்றத்திற்கான கருவிகளாக மாறும் என்பதை அவர் நிரூபித்தார். மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான அத்தியாவசிய வழிமுறையாக சேவை மற்றும் இரக்கத்தின் சக்தியை அவர் நம்பினார். ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான நமது தேடலில் அவரது பாதையை நாம் தொடர்ந்து பின்பற்றுவோம்”.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.