டெல்லி: வாஜ்பாய் 101-வது பிறந்தநாளையொட்டி,  டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான  ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்பட பல தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

 மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையொட்டி டெல்லியில் உள்ள ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினர்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா, பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், டெல்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் பிற பிரமுகர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாட்டு மக்களின் இதயங்களில் ஆழமாக இடம்பிடித்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு அவரது பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசக் கட்டுமானத்திற்காக அர்ப்பணித்தார். அவர் ஒரு சக்திவாய்ந்த பேச்சாளராகவும், துடிப்பான கவிஞராகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். அவரது ஆளுமை, படைப்புகள் மற்றும் தலைமைத்துவம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வழிகாட்டும் ஒளியாகத் தொடர்ந்து செயல்படும் என கூழுறி உள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்த தினமான  இன்று  (25.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள தேசிய நினைவிடத்தை நாளை பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் திறந்து வைத்து உரையாற்றவுள்ளார்.

இந்த தேசிய நினைவிடம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகிய தலைவர்களின் வாழ்க்கையையும் அவர்களது தத்துவங்களையும், சித்தாத்தங்களையும் எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 65 ஏக்கர் பரப்பளவில் 230 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம் தேச சேவை, தலைமைத்துவ பண்பு, கலாச்சார உணர்வு, ஆகியவற்றை எடுத்துரைக்கும் சின்னமாக அமைந்துள்ளது.  இந்த வளாகத்தில் அடல் பிகாரி வாஜ்பாய்,  ஷியாமா பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்யாயா ஆகியோரது 65 அடி உயர வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.  98,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நவீன அருங்காட்சியகத்தையும் இந்த வளாகம் கொண்டுள்ளது. சிறந்த தலைமைத்துவம், நல்லாட்சி  ஆகியவற்றை எடுத்துரைக்கும் வகையில் இந்த தேசிய நினைவிடம் அமைந்துள்ளது.

[youtube-feed feed=1]