பிரளயகால வீரபத்திர சுவாமி தேவஸ்தானம், கவிப்புரம் குட்டஹள்ளி, பெங்களூரு, கர்நாடகா

சிவபெருமானை அழைக்காமல், பார்வதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினான். அதைத் தட்டிக் கேட்கச் சென்றாள் பார்வதி. தட்சன் அவளையும் அவமதித்தான். கோபமடைந்த சிவன், தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி, யாகத்தை அழிக்க அனுப்பினார். வீரபத்திரர், யாகத்தை அழித்து, அவிர்பாகம் (யாகத்தின் பலன்) ஏற்க வந்திருந்த தேவர்களை விரட்டியடித்தார். அப்போது, 32 கைகளுடன் விஸ்வரூபம் எடுத்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் 32 கைகளுடன் “பிரளயகால வீரபத்திரர்” சிலை வடித்து, கோயில் எழுப்பப்பட்டது. காலப்போக்கில் இந்தக் கோயில் அழிந்து விட்டது. இப்பகுதியை ஆண்ட ராயராயசோழன் இங்கே வந்த போது, ஒரு புதரின் மத்தியில் பேரொளி மின்னியதைக் கண்டான். புதரை விலக்கியபோது, 32 கை வீரபத்திரர் சிலையைக் கண்டான். பின், அச்சிலையை பிரதிஷ்டை செய்து மீண்டும் கோயில் எழுப்பினான்.

குன்றின் மீது அமைந்த இக்கோயிலில், வீரபத்திரர் வடக்கு நோக்கியுள்ளார். சிவனுக்குரிய மழு, நாகம், அம்பாளுக்குரிய சூலம், பாணம் மற்றும் திருமாலுக்குரிய சங்கு, சக்கரம் உட்பட 32 கைகளிலும் ஆயுதம் ஏந்தியுள்ளார். இவரது சன்னதி எதிரில் நந்தி இருக்கிறது. உற்சவரும் 32 கரங்களுடன் காட்சி தருகிறார். அருகில் தட்சனும், அவனது மனைவி பிரசுத்தாதேவியும் இருக்கின்றனர்.

ஆவணி மாத திங்கள்கிழமைகளில் விழா எடுக்கப்படுகிறது. ஆவணி கடைசி ஞாயிறன்று இரவில் சுவாமி, முத்துப்பல்லக்கில் புறப்பாடாகிறார். தை மாதத்தில் ரத சப்தமி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. சப்தமிக்கு முதல்நாள் கோயிலுக்கு எதிரே அக்னி குண்டம் வளர்க்கின்றனர். அப்போது வீரபத்திரருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்கள் 2 பேர் மற்றும் வீரபத்திரர் வேடமணிந்த பக்தர் என மொத்தம் மூன்று பேர், குண்டத்தில் இருந்து நெருப்பை கையில் அள்ளி தட்டில் வைக்கின்றனர். அதில் தூபம் போட்டு வீரபத்திரருக்கு காட்டி, பூஜை செய்கின்றனர். அதன்பின் அம்மூவரும் பூக்குழி இறங்குகின்றனர். ரதசப்தமியன்று வீரபத்திரருக்கு விசேஷ ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, தேரில் உலா வருகிறார்.

செவ்வாய்க் கிழமைகளில் வீரபத்திரருக்கு, உருத்ராபிஷேகம் செய்யப்படுகிறது. கார்த்திகை கடைசி செவ்வாயன்று, தேங்காய்த்துருவல் சாத்தி அலங்காரம் செய்யப்படுகிறது. வீரபத்திரர் இத்தலத்தில் உக்கிரமாக இருப்பதால், இவரை சாந்தப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்கின்றனர்.

சுவாமி சன்னதி வலப்புறமுள்ள குன்றில், வீரஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக காட்சி தருகிறார். இவர் இங்கு வீரபத்திரரை வழிபட்டு, அவரது தரிசனம் பெற்றதாக ஐதீகம். வீரபத்திரர் சன்னதிக்கு இடப்புறம், மடியில் பார்வதியுடன், உமாமகேஸ்வரர் காட்சி தருகிறார். நந்திதேவர், இவரது பாதத்தை பிடித்தபடியும், அருகில் விநாயகர், முருகன் வணங்கியபடி இருப்பதும் வித்தியாசமான அமைப்பு. வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலிங்கம், பார்வதி மற்றும் விநாயகருக்கும் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சன்னதியில் சூரியன், ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் காட்சி தருகிறார்.

திருவிழா:

ஆவணி திங்கள், ரதசப்தமி

கோரிக்கைகள்:

புத்திர தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வீரபத்திரரிடம் வேண்டிக்கொள்ள நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வீரபத்திரருக்கு துளசி, வில்வம், நாகலிங்கப் பூ மற்றும் எலுமிச்சை மாலை அணிவித்து, போளி நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்