டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ள நிலையில், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின்  75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடத்தப்பட உள்ள ‘ஹர் கார் திரங்கா’ (வீடுதோறும் மூவர்ணம்) இயக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதுபோல,  75 நாள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியஅரசின் கலாசாரத்துறை செயலாளர் கோவிந்த் மோகன், மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை செயலாளர் அபூர்வ சந்திரா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, உலகத்திலேயே மிகப்பெரிய நிகழ்வாக ‘ஹர் கார் திரங்கா’ (வீடு தோறும் மூவர்ணம்) நடத்தப்பட உள்ளது. பல வகைகளில் மக்கள் அனைவருக்கும் தேசியக்கொடி சென்று சேருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.  நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்கும்  வகையில், அதிக அளவில் கொடி வினியோகம் செய்யும் நிறுவனங்களை மத்திய ஜவுளித் துறை கண்டறிந்துள்ளது. ஆகஸ்டு 1-ந் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களிலும் தேசியக் கொடியை மக்கள் நேரில் சென்று வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்தனர்.