சென்னை: ஞாயிறு உள்பட விடுமுறை நாட்களிலும், அஞ்சலகங்களில் உள்ள ஆதார் சேவை மையம்  செயல்படும் என கோட்ட அஞ்சல்துறை உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

தேசிய அஞ்சல் வாரம் கடந்த 9-ம் தேதி தொடங்கி இன்று (13-ம் தேதி) வரை கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி, பொது அஞ்சல் அலுவலகம் சார்பில் 11-ம் தேதியன்று தபால்தலை நாள் கொண்டாடப்பட்டது.  சென்னை கடற்கரை சாலையில் உள்ள,பள்ளிகளில் சேமிப்பு முகாம் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு தபால்தலை விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதையடுத்து நேற்று (12ந்தேதி)  அஞ்சல்கள் மற்றும் பார்சல் தினம் கொண்டாடப்பட்டது. அஞ்சல் அலுவலகம் வழங்கும் பல்வேறு சேவைகள் குறித்து விளக்குவதற்கும் கருத்துகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இன்று (அக். 13) அந்தியோத்தியா திவாஸ் கொண்டாடப்படுகிறது. அப்போது ஆதார் விழிப்புணர்வு முகாம்கள், சாமானியர்களுக்கான தபால் அலுவலக சேமிப்பு மேளாக்கள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய அஞ்சல்துறை உயர்அதிகாரி சு.பாக்கியலட்சுமி,  சென்னை பொது அஞ்சல் அலுவலகம் ஆதார், பாஸ்போர்ட், பொது சேவை மையம் போன்ற வழக்கமான குடிமக்கள் சேவைகளை வழங்கி வருகிறது. ஆதார் சேவை மையம் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் இயங்கி வருகிறது. பொதுமக்கள் இந்த சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.