கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சூர்யா சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். திருமணத்துக்குப் பிறகு நீண்ட நாட்களாக ஓவியம் வரையாமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஓவியம் வரைதலை மீண்டும் தொடங்கிய சூர்யா புதுமையாக ஒன்றைச் செய்யவேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி ‘ரோஜா’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் முதன்முதலில் இசையமைத்த ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தொடங்கி, பிரபலமான 391 பாடல்களின் வரிகளைக் கொண்டு ஏ.ஆர்.ரஹ்மானின் ஓவியத்தை வரைந்துள்ளார். ‘பம்பாய்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணாளனே’ பாடல் வரிகளைக் கொண்டு கண்களை வரைந்துள்ளார். சுமார் 76 மீட்டர் நீளமும், 56 மீட்டர் அகலமும் கொண்ட இந்த ஓவியத்தை முழுமையாக வரைந்து முடிக்க சூர்யா எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

தற்போது இந்த ஓவியம் இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.