சிலம்பட்டி

சிலம்பட்டி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நடந்த தகராறில் போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான, கள்ளபட்டியைச் சேர்ந்த முதல் நிலை போலீஸ்காரரான முத்துக்குமார் (40 நேற்று  பணி முடிந்து முத்தையன்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தும் போது, அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அடையாளம் தெரியாத சிலரிடம் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பிறகு அங்கிருந்து வெளியே வந்த முத்துக்குமார், கள்ளபட்டியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வந்தபோது அடையாளம் தெரியாத சிலர், பின்னால் வந்து போலீஸ்காரரை கல்லால் தாக்கினர். இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே போலீஸ்காரரான முத்துக்குமார் உயிரிழந்தார்.

முத்துக்குமாருடன் உடனிருந்த ராஜாராம் என்பவரும் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில், உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் உசிலம்பட்டி டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்காரர் ஒருவர் டாஸ்மாக் மதுக்கடையில், மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.