சென்னை:

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தகர்ணன் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்கள் கூறியதை தொடர்ந்து கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அவர் மீது உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதன் விசாரணைக்கு அவர் ஆஜராகாததால் அவர் நீதிபதி பணியை செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி உத்தரவிட்டது.

கடந்த 4ம் தேதி அவருக்கு மனநல பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. ஆனால், நீதிபதி கர்ணன் அதற்கு மறுத்து விட்டார்.

இந்நிலையில், நீதிபதி கர்ணன் நேற்று முன்தினம் ஓர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தனக்கு எதிரான அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகியோருக்கும், தன்னை நீதிபதி பணியாற்ற தடை விதித்த நீதிபதி பானுமதிக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

நீதிபதி கர்ணனின் இந்த உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே நீதிபதி கர்ணன் சென்னை வந்திருந்தார். இந்நிலையில கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் அவர் ஆந்திராவில் உள்ள தடா மாவட்டத்தில் இருப்பது மொபைல் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் ஆந்திராவில் உள்ள தடாவுக்கு புறப்பட்டு சென்றனர்.