திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையிடம்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை  பாஜகவை சேர்ந்த எச் ராஜா அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பாஜக பொறுப்பு குழு தலைவா் எச்.ராஜா மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்தும், அவரின் அமெரிக்க சுற்றுப் பயணம் குறித்தும் விமா்சனம் செய்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிக்கை வெளியிட்டார்.

கடந்த 18ம் தேதி தமிழ்நாடு எங்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேற்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சி பொருளாளர் ரூபி மனோகரன் ஆகியோர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் அளித்துள்ள இந்த புகார் மனுவில் எச் ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.