டெல்லி: அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான்மீது தாக்குதல் நடத்தி வருவதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் படைகள் , வளைகுடா நாடுகளில் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களை பிரதமர் மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பதற்றத்தை உடனடியாகக் குறைக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் அதே வேளையில் வளைகுடா நாட்டுடனான இந்தியாவின் ஒற்றுமையை மீண்டும் வலியுறுத்துகிறார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் கூட்டு தாக்குதலால் வளைகுடா நாடுகளில் இருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் கடந்த 20 ஆண்டுகளாக ஈரான் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதனை நிறுத்துவது தொடர்பாக ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது. கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஈரான் அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் நடுவில் ஈரான் செயல் தங்களுக்கும் மற்றும் மத்திய கிழக்கில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும் அச்சுறுத்தல் என கூறி இஸ்ரேல் தாக்குதல் நடத்த இந்த பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவடைந்தது. 12 நாட்கள் ஈரான் – இஸ்ரேல் இடையே போர் நடந்தது.
போரின் கடைசி நாளில் அமெரிக்கா தனது படைகளைக் கொண்டு ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கி அழித்ததாக சொல்லப்பட்டது. இதற்கிடையில் 8 மாதங்கள் கழித்து மீண்டும் அணு சக்தி திட்டத்தை ஈரான் தொடங்க முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஈரான் வரவில்லை என்றால் தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இறுதி முடிவு எட்டும் முன் இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா ஈரானை தாக்கியது.
இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சத்தலைவரான கமெனி உயிரிழந்தார். இதனால் பழி தீர்க்க ஈரான் சபதமெடுத்துள்ளது. அதன் ஒரு படியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்று வருகின்றது. கத்தார், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஒமன், சிரியா, ஜோர்டன், குவைத், பஹ்ரைன், சைப்ரஸ் ஆகிய 11 நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
அங்கு சிக்கியிருக்கும் இந்திய மக்கள் தங்களை மீட்குமாறு தொடர்ந்து இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேசமயம் வான்வெளி மூடப்பட்டதால் விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத்துறை நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
பிரதமர் மோடி கண்டனம்
இந்த நிலையில் ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், “ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசினேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்து, இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலங்களில் இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒற்றுமையாக நிற்கிறது. இந்தியர்களைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி” என கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், “தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாக வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது” என தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் பிரதமர் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]