அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்த கருத்துகள் தொடர்பான கிரிமினல் அவதூறு வழக்கில் அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுக்களை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி பட்டம் தொடர்பாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த அவதூறு வழக்கில், தங்களுக்கு எதிராக மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை உறுதி செய்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‘

நீதிபதி ஹஸ்முக் டி.சுதர் அடங்கிய பெஞ்ச், பிப்ரவரி 2-ம் தேதி இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, மனுக்கள் மீதான தனது உத்தரவை ஒத்திவைத்த நிலையில், நேற்று இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இருவரும், குஜராத் பல்கலைக்கழகம் தொடர்ந்த கிரிமினல் அவதூறு வழக்கில் விசாரணை நீதிமன்றம் அனுப்பிய சம்மன் மற்றும் அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுவை ரத்து செய்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

தங்கள் மனுக்களில் அவர்கள், குஜராத் பல்கலைக்கழகம் விசாரணை நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர முடியாது என்றும், மாறாக செஷன்ஸ் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஹேஸ்முக் சுதார், அவற்றைத் தள்ளுபடி செய்து, ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முன்னதாக, பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பாக அரவிந்த் கேஜ்ரிவால், சஞ்சய் சிங் பேசிய கருத்துகள் தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக குஜராத் பல்கலைக்கழகம் தாக்கல் செய்த மனுக்கள் மீது பெருநகர நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்.15-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த சம்மன்களை எதிர்த்து அவர்கள் இருவரும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர்.

என்றாலும் செஷன்ஸ் நீதிமன்றம் சம்மனை உறுதி செய்து, ஆம் ஆத்மி தலைவர்களின் மனுக்களை தள்ளுபடி செய்தது. தொடர்ந்து அவர்கள் இருவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தை நாடினர். உயர் நீதிமன்றமும் சம்மனுக்கு இடைக்கால தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து கேஜ்ரிவாலும், சஞ்சய் சிங்கும் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றமும் அவர்களின் மனுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக,  பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு சான்றிதழ் நகல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) வழங்க உத்தரவிடக் கோரி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் (சிஐசி), பிரதமர் மோடியின் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பு சான்றிதழ் விவரங்களை வழங்குமாறு, பிரதமர் அலுவலகத்தின் தகவல் தொடர்பு அதிகாரி, குஜராத் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்களின் தகவல் தொடர்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில், குஜராத் பல்கலைக்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரேன் வைஷ்ணவ், தலைமை தகவல் ஆணையரின் உத்தரவை ரத்து செய்தார். பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்களை பிரதமர் அலுவலகம், குஜராத் மற்றும் டெல்லி பல்கலைக்கழகங்கள் வழங்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டார். மேலும், பிரதமர் மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரி மனு தாக்கல் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் நீதிபதி அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது.