சென்னை

சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது தமிழக அனைத்து வகை மற்று திறனாளிகள் சங்கம் புகார் அளித்துள்ளது.

சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே, தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்ற ரீதியில் மாணவர்களிடையே சொற்பொழிவு நடத்தியுள்ளார்.

இவர் கடந்த ஆக.28-ம் தேதி சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் கை, கால் இல்லாமல் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம் தான் காரணம் என கூறியுள்ளார்.

அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என பேசியதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார்.

மகாவிஷ்ணு மைக்கில் பேசி அவரை அவமானப்படுத்தியதாக வந்ததகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் விசாரணை நடத்தியுள்ளார்.

மகா விஷ்ணு மீது, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில்

”மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையிலும், அவர்கள் மனம் புண்படும்படியும், அறிவியலுக்கு மாறாக மகா விஷ்ணு சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். இவரது பேச்சை மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாக நாங்கள் கருதுகிறோம்.

எனவே இந்த மகாவிஷ்ணுவை மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், 2016 ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் படியும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.