சென்னை: பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய முனையமாக மாற்றும் இந்தியன் ரயில்வே, பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரை மேலும் 2 புதிய ரயில் பாதை அமைக்க திட்டமிட்டு உள்ளது. அதன்படி புதிய பாதையாக 5வது மற்றும் 6வது ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து, சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5,6-வது புதிய பாதைகள் அமைக்கவும், ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில், பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கூடுதல் ரயில்களை இயக்க வசதியாக, பெரம்பூர் ரயில் நிலையத்தை புதிய ரயில் முனையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவித்திருந்தார். இதற்காக, தெற்கு ரயில்வேயில் நிர்வாக தரப்பில் ஒப்புதல் பெறப்பட்டு, பெரம்பூர் ரயில் நிலையத்தை ரூ.360 கோடியில் 4-வது முனையமாக மாற்ற, ரயில்வே வாரியத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதுதவிர,பெரம்பூர் – அம்பத்துார் இடையே 6.4 கி.மீ., துாரத்துக்கு 5,6-வது புதிய பாதை ரூ.182 கோடி ரூபாயில் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெரம்பூரை 4-வது புதிய முனையமாக மாற்றவும், கூடுதலாக 5, 6-வது பாதைகள் அமைக்கவும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்படுவதால், பயணிகள் தேவைக்கு ஏற்ப கூடுதல் முனையங்கள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில், பெரம்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. 80-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இந்த ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுகின்றன. எனவே, பயணிகளுக்கான அடிப்படை வசதியுடன் கூடிய, மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால், இங்கு ரூ.360 கோடியில் 4-வது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்பட்டது. ரயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்த வசதி, வணிக வளாக பகுதிகள், சுற்றுச் சுவர்கள், மேம்படுத்தப்படும் நுழைவாயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இணைத்து அனுப்பப்பட்டது. தற்போது, இந்த அறிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
வடமாநிலங்கள் மற்றும் மேற்கு மாவட்ட ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருகின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி(தென்மாவட்டங்கள் வழியாக வரும் ரயில்கள்) ரயில்கள் சென்னை எழும்பூருக்கு வந்து செல்கின்றன. இதில் எழும்பூர் ரயில் நிலையம் சிறியது என்பதால், அதிகப்படியான ரயில்களை நிறுத்தி வைக்க முடியாத நிலை இருந்தது. இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தை 3வது ரயில் முனையமாக மேம்படுத்த ரயில்வே திட்டமிட்டது, அதை 3வது முனையமாகவே தற்போது மாற்றிவிட்டது. இனி தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்படும் புதிய ரயில்கள் தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மேற்கு மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பக்கத்தில் தாம்பரம் போல் இடவசதி உள்ள ரயில் நிலையங்கள் இல்லை.. தற்போதைய நிலையில் சென்ட்ரலுக்கு அடுத்து உள்ள ரயில் நிலையமாக அரக்கோணம் 80 கிமீ தூரத்தில் இருக்கிறது. இதனால் சென்னையில் பெரம்பூரை ஒட்டிய பகுதியில் 4வது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே யோசித்து வந்தது. தற்போது சென்னைக்குள் வரும் ரயில்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நிற்கின்றன. ஆனால் போகும் போது பெரம்பூரில் நிற்காது. அங்கு பெரிய அளவில் இடவசதிகள் இல்லை. இதனால் அங்கு முனையம் அமைக்கப்பட வாய்ப்பு இல்லாத நிலையே இருந்து வந்தது.
இந்த நிலையில் பெரம்பூர் லோகா, வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டி ரயில்வேக்கு சொந்தமான ஏராளமான இடம் உள்ள காரணத்தால் அங்கு 4வது ரயில் முனையம் அமைக்கலாம் என்று தெற்கு ரயில்வே யோசித்தது. ஆனால் அதனை ரத்து செய்த தெற்கு ரயில்வே சென்னையின் 4-வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
ரூ.428 கோடி ரூபாய் திட்டமதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. பெரம்பூர் லோகோ வொர்க்ஸ் அருகே உள்ள ரயில்வே கிடங்கை அகற்றிவிட்டு புதிய ரயில் முனையம் அமைக்க ரயில்வேத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல, இங்கிருந்து ரயில்கள் இயக்க வசதியாக, பெரம்பூர் – அம்பத்துார் இடையே 5,6-வது புதிய பாதைகள் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய பாதைகள் அமையும்போது, அம்பத்துாரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை இயக்க முடியும்.
பெரம்பூரில் தற்போது, நான்கு நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக இரண்டு நடை மேடைகள் அமைக்கப்படும். மேற்கண்ட பணிகளுக்கு விரைவில் ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட உள்ளது. வரும் 2028-ல் இந்த புதிய முனையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.