திருத்தணி

திருத்தணியில் கொட்டும் மழையில் தார்ச்சாலைகள் அமைப்படுவதற்கு அங்குள்ள மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னை அருகே உள்ள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரத்தில் சென்னை செல்லும் சாலை, திருப்பதி செல்லும் சாலை, அரசு ஆஸ்பத்திரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

தார் சாலை அமைக்கப்படும் போது திருத்தணி பகுதியில் பலத்த மழை கொட்டி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆயினும் கொட்டும் மழையின் போது பணியை நிறுத்தாத தொழிலாளர்கள் மழைதண்ணீரின் மேலேயே தார் சாலை அமைத்தனர்.

அங்கிருந்த பொதுமக்கள் சிலர் இது குறித்து கண்டனக் கேள்வி எழுப்பியபோது எதையும் கண்டு கொள்ளாமல் அந்த தொழிலாளர்கள் மழையை பொருட்படுத்தாமல் சாலையை அமைத்துக்கொண்டு இருந்தனர்.

இணையத்தில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கெமிக்கலை கலந்து விட்டு தார் சாலை அமைக்கும் வீடியோ பரவி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.