திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டட்தில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக கஞ்சி தொட்டி திறப்பு போராட்டம் நடைபெறுகிறது.

கடந்த 1929 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களை பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. குத்தகை காலம் வரும் 2028 ஆம் ஆண்டில் முடியவுள்ள நிலையில் அதற்கு முன்பாகவே அந்த நிறுவனம், தேயிலை தோட்டத் தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்தது.

தமிழகம் முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், மாஞ்சோலையில் இருந்து தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்ற இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. பிபிடிசி நிறுவனமும் தொழிலாளர்கள் வீடுகளை தற்காலிகமாக காலி செய்ய வேண்டாம் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.

மேலும் இலங்கையிலிருந்து வந்த தமிழர்களுக்காக எப்படி வாழ்வளிக்க டான்டீ நிறுவனம் தொடங்கப்பட்டதோ, அதுபோல தொடர்ந்து இந்த தேயிலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.பலரும் இந்த தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத மக்களை வெளியேற்றக் கூடாது எனத் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த மாதம் முதல் மாஞ்சோலை தேயிலை தோட்ட கிராமங்களில் வேலை இல்லாமல் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதால் தமிழக அரசின் மற்றும் நீதிமன்றத்தின் கவனத்திற்கும் தங்களது வறுமை நிலையை எடுத்துச் சொல்லும் வகையில் கஞ்சித் தொட்டியை திறந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையொட்டி நேற்று ஊத்து தேயிலைத் தோட்ட கிராமத்தில் மக்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று மாஞ்சோலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கஞ்சி தொட்டியை திறந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.