டெல்லி: சமூக வலைதளங்களான கூகுள், பேஸ்புக் தவறாக பயன்படுத்தப்படுவது தொடர்பாக விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன் சம்மன் அனுப்பி உள்ளது. அதன்படி, நாளை (29ந்தேதி) நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள், பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில், மத்தியஅரசு சமீபத்தில் புதிய விதிகளை அறிவித்து உள்ளது. இதை கடைபிடிக்காத சமூக வலைதளங்கள் தடை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பராளுமன்ற நிலைக்குழுவும் சமூக வலைதளங்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க  சம்மன் அனுப்பி உள்ளது.

பயனர்களின்  உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் சமூக ஆன்லைன் செய்திகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து பேஸ்புக் இந்தியா மற்றும் கூகிள் இந்தியா ஆகியவற்றின் கருத்துக்களைக் கேட்க தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஜூன் 29 அன்று ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு  தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய கூகுள், பேஸ்புக் ஆகிய இரண்டு  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளை குழு அழைத்துள்ளது.

ஏற்கனவே   ஜூன் 18 அன்று, சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் செய்திகளை தவறாகப் பயன்படுத்துவதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காக குழு முன் ஆஜராகுமாறு குழு டிவிட்டரை அழைத்திருந்தது. அதைத்தொடர்ந்து தற்போது பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.