இந்த கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 21ந்தேதி தொடங்குகிறது. ஆகஸ்டு 21ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் மத்தியஅரசு சில புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த கூட்டத்தொடரில் அணுசக்தி துறையில் தனியார் துறை நுழைவதை அனுமதிப்பது உட்பட சில முக்கிய சட்டங்களை கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ள முக்கிய தீவிரவாத முகாம்களை அழித்தது. மேலும் ஈரானில் இருந்து இந்தியர்கள் மீட்பு உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
மேலும் அகதிகளாக வந்து,. திருட்டுத்தமான வாக்குரிமை பெற்றுள்ள நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களை இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தும், உச்சநீதிமன்றத்தை நாடியும், அதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதனால், போலி ஆதாரங்கள் மூலம் வாக்குரிமை பெற்றவர்களை நீக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளது. தற்போது பீகாரில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி.க்கள், இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தலையீடு குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிஹார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்தும் பிரச்சினை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்கும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற உத்தியை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் எம்.பி.க்கள் அடங்கிய ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள சோனியாவின் இல்லத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் ஜூலை 19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.