டெல்லி: பாலாறு மாசுபாடு விவகாரம் தொடர்பாக வழக்கில், மாசு தடுப்பு குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலைமையிலான  தணிக்கை குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த   3 மாவட்ட ஆட்சியா்கள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு  ஆஜரான நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில், ஆட்சியர்களின் நடவடிக்கை மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது, ஐஐடி சென்னை நிபுணர்கள் தலைமையில் ஒரு தணிக்கை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் உயிர்நாடியாக உள்ளது பாலாறு. இந்த  பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரியும், மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு கடந்த ஓராண்டாக விசாரிக்கப்பட்ட வருகிறது.
கடந்த கால விசாரணையின்போது,  பாலாறு மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி 30}ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாடு விவகாரத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. அதன்படி,  கடந்த மாதம் 11ஆம் தேதி   மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்களும் உச்சநீதிமன்றத்தில்  ஆஜராகினர். அவர்களின் நடவடிக்கைமீத அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், . உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்கத் தவறிவிட்டனர் என சாடியது.
இந்த வழக்கு செப்டம்பர் 16ந்தேதி மீண்டும் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாலாறு  மாசுபாட்டைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், “கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள், “இந்தப் பிரச்னையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பது தெரியும். அதேவேளையில் இந்த மாசுபாட்டைத் தடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ எனக் கூறினர்.
மனுதாரரான வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஸ்வரன், “இந்த விவகாரத்தில் கூடுதலாக தீவிர கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைக் கழிவு நீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வெளியேற்றப்படும் நீரில் அமில அளவுகளை ஆய்வு செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, பாலாறு மாசுபாடு குறித்து தணிக்கை செய்ய ஒரு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஐஐடி சென்னையைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள், சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 6 மாதங்களில் பாலாறு மாசுபாடு குறித்த தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  முதல் அறிக்கையைப் பார்த்த பிறகு, அடுத்த ஆய்வை எவ்வளவு கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.