சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் 3 நாட்களுக்கு  மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தொடக்கத்தில் தீவிரமாக காணப்பட்டது. பிறகு மழை குறைந்து அவ்வப்போது மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ம் தேதி (திங்கட்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

நாளை (சனிக்கிழமை) முதல் 24-ம் தேதி  வரை 3 நாட்களுக்கு தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிக கனமழை வரை பெய்யக் கூடிய நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நிர்வாக ரீதியாக ஆரஞ்சு எச்சரிக்கையையும், கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

வரும் 24-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, அதனையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும், தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று மணிக்கு 35 கி மீ முதல் 55 கி மீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.