டில்லி

நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை குடியரசுத்தலைவருக்குப் பதில் பிரதமர் திறப்பதை எதிர்த்து விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தற்போதைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய நாடாளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி, புதிய நாடாளுமன்றம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.  தற்போது கட்டுமான பணி முடிவடைந்து, புதிய நாடாளுமன்றம் தயாராகி விட்டதால் வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மக்கள் பணத்தில் கட்டப்பட்டது என்பதாலும், நாட்டின் முதல் குடிமகள் என்பதாலும் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி போன்றவர்கள் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டனர்.

நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் இணையத்தில் அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 28-ந் தேதி காலையில் இருந்து பூஜை, கீர்த்தனைகள், சடங்குகள் நடைபெறும் என்றும், பிற்பகலில் திறப்பு விழா நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

விருந்தினர்கள் அனைவரும் காலை 11.30 மணிக்குள் இருக்கையில் அமர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அழைப்பிதழை பெற்றவுடன் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் விவாதிக்க தொடங்கி கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டன.

எதிர்க்கட்சி வட்டாரங்கள்.

”புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. எனவே, திறப்பு விழாவைக் கூட்டாகப் புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. இதுதொடர்பாக புதன்கிழமை (இன்று) இறுதி முடிவு எடுக்கப்படும். திறப்பு விழாவைக் கூட்டாகப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்படும்.”

எனத் தெரிவித்துள்ளன.