டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடி வரும் இந்திய ராணுவம், ஏற்கனவே ஆபரேஷன் மகாதேவ் என்ற பெயரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய நிலையில், தற்போது ஆபரேசன் சிவசக்தி என்ற பெயரில் இரண்டு பயங்கரவாதிகளை என்கவுண்டர் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கைக்குப் பிறகு இந்திய ராணுவம் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை ஆபரேசன் சிவசக்தி நடவடிக்கையின் மூலம் இந்திய ராணுவ வீரர்கள் இன்று (புதன்கிழமை காலை சுட்டுக் கொன்றனர் . உளவுத் துறை தகவலை அடுத்து ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை தேடும் பணி, இந்திய ராணுவத்தின் வொயிட் நைட் கார்ப்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிவசக்தி எனப் பெயரிடப்பட்ட நிலையில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீர் போலீஸுடன் இணைந்து ராணுவத்தின் விரைவான நடவடிக்கை மூலம் பயங்கரவாதி களின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த திங்கள்கிழமை டாச்சிகம் வனப்பகுதியில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் மூன்று ஏ கிரேட் பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில், பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட லஷ்கர் – ஏ – தொய்பாவின் கமெண்டர் சுலைமான் ஷாவும் கொல்லப்பட்டார். இந்திய ராணுவத்தினர் மூன்று நாள்களில் இரண்டு ஆபரேஷன்களை நடத்தியிருப்பது ஜம்மு – காஷ்மீர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.