சென்னை: ஊட்டி அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஒருவர் அங்கு படிக்கும் பெண் மாணவிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில், ஆசிரியர் செந்தில்குமார் என்பரை போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர், ஊட்டி ஹோப் பார்க் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் (வயது 50).  இந்த அந்த உயர்நிலை பள்ளியில்,   6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அறிவியல் வகுப்பு எடுத்து வந்தார்.

இதற்கிடையில்,  மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.  உடலில் நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அதை வகுப்பறையில் செயத்து காட்ட கூறி,  மாணவிகளின் உடலில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.  ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பள்ளியில் படித்த 21 மாணவிகள் தங்களுக்கு அறிவியல் ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். மேலும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விரைந்து வந்த  ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.  விசாரணையில் முடிவில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊட்டியில் உள்ள கிளை ஜெயிலில் அடைத்தனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், செந்தில்குமார் கடந்த 23 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தான் ஊட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார்.  அதனால்,  இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி உள்ளதால், முன்பு பணியாற்றிய பள்ளிகளிலும் மாணவிகளுக்கு இவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளரா? என்பது குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் இணைந்து இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.