அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, தனது குடும்பத்தாருடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மேலும்,, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தானத்தின் எஸ்வி. அன்னதான அறக்கட்டளைக்கு சந்திரபாபு நாயுடு ரூ.44 லட்சத்திற்கான காசோலையை தேவஸ்தான அறங்காவலர் பிஆர். நாயுடுவிடம் வழங்கினார்.
பின்னர், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, திருப்பதி ஏழுமலையான் கோயில் என்பது பல நூறு ஆண்டுகளாக இந்து பக்தர்களின் உணர்வுகளோடு பின்னி பிணைந்த ஒரு கோயிலாகும். என்னை அலிபிரியில் நடந்த வெடி குண்டு சம்பவத்திலும் ஏழுமலையான் தான் காப்பாற்றினார். திருமலையில் புனித தன்மையை சீர்குலைக்கும் நிகழ்வுகள் நடத்த அனுமதிக்க மாட்டோம்.
அலிபிரி பைபாஸ் சாலையில் மும்தாஜ் ஹோட்டல் கட்ட வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும். மேலும், இந்துக்கள் அல்லாதவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்ற அனுமதி இல்லை. இது இந்துக்களின் மனநிலையை பாதிக்கும் செயலாகும். 7 மலைகளும் ஏழுமலையானின் சொத்தாகும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.
திருப்பதி ஏழுமலையான் குடியிருந்து வரும் திருமலை ஏழு மலைகளைகொண்டது. ஏழுமலையான் கோவில் கொண்டுள்ள இடம் சப்தகிரி எனப்படும். இந்த 7 மலைகளான, கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, நீலாத்ரி, சேஷாத்ரி, வேங்கடாத்ரி, நாராயணாத்ரி ஆகியவையாகும்.
1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். இம்மலையில் வெங்கடாசலபதியாக (ஸ்ரீனிவாசன்) மகாவிஷ்ணு காட்சி தருகிறார்.
2. சேஷ மலை: பெருமாளின் அவதாரத்திற்காக ஆதிசேஷன் மலையாக வந்தார். இது ஆதிசேஷன் பெயரால் ‘சேஷமலை’ என்று அழைக்கப்படுகிறது.
3. வேதமலை: வேதங்கள் இங்கு மலை வடிவில் தங்கி எம்பெருமானை பூஜித்தன. எனவே இது ‘வேத மலை’ எனப்பட்டது.
4. கருட மலை: இங்கு சுவாமியை வணங்க வந்த கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து ஏழுமலையை எடுத்து வந்தார். அதனால் இது ‘கருட மலை’ எனப் பெயர் பெற்றது.
5. விருஷப மலை: விருஷபன் என்ற அசுரன், இங்கு சுவாமியை வணங்கி மோட்சம் பெற்றான். அவனது பெயரில் இது ‘விருஷப மலை’ எனப் பெயர் பெற்றது.
6. அஞ்சன மலை: ஆஞ்சநேயரின் தாய் அஞ்சனை. தனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க ஆதிவராகரை வேண்டி தவமிருந்தாள். அதன் பயனாக ஆஞ்சநேயரைப் பெற்றாள். இவளது பெயரில் ஏற்பட்ட மலை ‘அஞ்சன மலை’ எனப்படுகிறது.
7. ஆனந்த மலை: ஆதிசேஷன், வாயு பகவானுக்கிடையே போட்டி ஏற்பட்டபோது, மகாவிஷ்ணு நடுவராக இருந்தார். இருவரும் பலத்தில் சமமானவர்கள் என்று தீர்ப்பளித்தார். இதனால் வாயுவும் ஆதிசேஷனும் ஆனந்தம் அடைந்தனர். இதன் காரணமாக இது ‘ஆனந்த மலை’ என்று பெயர் பெற்றது.
கடந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியின்போது, இந்த மலைகளில் கிறிஸ்தவ அமைப்புகள் தேவாலயங்களை நிறுவின. மேலும் பல ஆக்கிரமிப்புகள் நடத்தப்பட்டன. அவை எல்லாம் அகற்றப்படும், 7 மலை பகுதிகளும் ஏழுமலையானனுக்கே உரிமையானது என முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி அளித்துள்ளார்.