மும்பை

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் விவரம் ஒரு இணைய தளத்தில் வெளியிட்டதாக எழுந்த புகாரில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை மகாராஷ்டிரா போலீஸ் கைது செய்துள்ளது.

ஒரு தனியார் இணையதளத்தில் ஜியோ சிம் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் வெளியானதாக செய்தி வந்தது.   அந்த இணையதளத்தில் வாடிக்கையாளர்கள் ஜியோவில் பதிந்த அனைத்து விவரங்களும் காண முடியும் எனவும் சொல்லப்பட்டது.   ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த தளம் முடங்கி விட்டது.

ஜியோ நிறுவனம், அனைத்து தகவல்களும் யாராலும் திருடப்பட முடியாத அளவுக்கு பத்திரமாக இருப்பதாக உறுதி அளித்தது.  இருப்பினும் இது குறித்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தது.

தற்போது, மகாராஷ்டிரா மாநில சைபர் கிரைம் போலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.  அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சுரு மாவட்டத்தை சேர்ந்தவர்.  அவரை விசாரித்ததில், அவர் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர் என்றும், ஹேக்கராகவும் செய்ல்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.  அவரிடமிருந்த கம்ப்யூட்டர், மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப் பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.