கொல்லம்

கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஒரு இளம்பெண் பத்மநாபபுரத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார்.  இவர் பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூன் 30 ந்தேதி , “சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ்” பத்தனாபுரத்தைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்வதற்காக மனு கொடுத்து உள்ளார்.

அத்துடன் புனலூர் உறுகுந்நு பகுதியைச் சேர்ந்த இன்னொரு இளைஞரையும் திருமணம் செய்வதற்காக புனலூர் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூலை 13 ந்தேதி அதே இளம்பெண் மனு அளித்திருக்கிறார். இரண்டு இளைஞர்களை ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள, இரண்டு ரெஜிஸ்ட்ரார் அலுவலகங்களில் மனு தந்திருப்பது அதிகாரிகளின் ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

திருமண விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதால், இந்த விஷயம் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து மாப்பிள்ளை பெயரைத் திரும்பச் சரிபார்த்தனர். அதில்  2 ஆண்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனவே புனலூர் சார் பதிவாளர், அந்த பெண்ணின் விண்ணப்பத்தை பத்மநாபபுரம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். வெவ்வேறு ஆண்களின் பெயரைக் குறிப்பிட்டு திருமணத்திற்கு விண்ணப்பித்தது குறித்து, விவரம் கேட்பதற்காக அந்த பெண்ணை பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவழைத்திருந்தனர்.

அந்த பெண், புனலூரை சேர்ந்த இளைஞருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் தந்தார். அவர் புனலூரை சேர்ந்த இளைஞருடன் நீண்ட நாட்களாகத் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தாராம். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, அந்த இளைஞரிடம் இருந்து பிரிந்து, தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.

அப்போது அந்த பெண்ணுக்கு பத்மநாபபுரத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு அந்த இளைஞர் ஒரு வெள்ளை காகிதத்தில், தன்னை கையெழுத்துப் போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில், ”அந்த பெண் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. பெண் சொல்லும் 2 ஆண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க வேண்டும்.  இதற்காக பத்மநாபபுரம் மற்றும் புனலூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வெவ்வேறு நாட்களில் வரவேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.