சென்னை:   சென்னை ஜாபர்கான் பேட்டை பகுதியில்  பிட்புல் நாய் கடித்து குதறியதில்  ஒருவர்  துடிதுடித்து பலியானார். அதை  தடுக்க முயன்ற உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பிட்புல் இன நாய்கள் சமீபகாலமாக மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் இந்த வகை நாய் வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து  வந்ததால், பிட்புல், ராட்வீலர் உட்பட மனித உயிருக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் 23 வகை நாய்களை விற்க, வளர்க்க மத்திய அரசு தடைவிதித்துள்ளது. ஆனால்,  மக்கள் காதில் வாங்காத நிலையே உள்ளது. மாநில அரசுகளும் அதை கண்டுகொள்ளாத நிலையே தொடர்கிறது.

இந்த நிலையில்,   சென்னையில் பிட்புல் ரக நாய், அருகே உள்ள  வீட்டில் அமர்ந்திருந்த நபரை கடுமையாக கடித்து குதறியதுடன், அவரது  மர்ம உறுப்பையும் கடித்து குதறியதில் சமையல்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அதை தடுக்க முயன்ற நாயின் உரிமையாளர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில்,   பிட்புல் நாய்கடித்து உயிரிழந்தவர், சென்னை, ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.எம் கார்டன் தெருவை சேர்ந்தவர் கருணாகரன்(48) என்பது தெரிய வந்தது. இவர்  சமையல்   வேலையை முடித்து விட்டு வழக்கம் போல்  பிற்பகல் 3 மணியளவில்  தனது வீட்டின் முன்பு அமர்ந்திருந்தார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூங்கொடி (48) என்பவர் தனது பிட்புல் ரக வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டார். அந்த சமயத்தில் வீட்டின் தின்னையில் அமர்ந்திருந்த   கருணாகரனை பார்த்தவுடன் திடீரென அவர் மீது சீறிப்பாய்ந்தது.  அதை நாயின் உரிமையாளரான பூங்கொடி தடுக்க முயன்றார். அவரால் தடுக்க முடியவில்லை.

அதற்குள் நாய் கருணாகரனை துரத்தி சென்று கடித்து குதறியது, அவரது அவரது மர்ம உறுப்பு மற்றும் இடது தொடையை கடித்துக் குதறியது. மேலும் அதை தடுக்க முயன்ற பூங்கொடியின் கை மற்றும் கால்களையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த பொதுமக்கள் நான்கு புறமும் சிதறி ஓடினர்.

ஒருகட்டத்தில் பூங்கொடி நாயை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவத்தில் கருணாகரன் உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் குமரன்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடி கொண்டிருந்த கருணாகரன் மற்றும் பூங்கொடியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கருணாகரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் மர்ம உறுப்பில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியதால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மேலும் பூங்கொடி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார்.

இதையடுத்து, குமரன்நகர் போலீசார் சமையல்காரரை கடித்துக் கொன்ற பிட்புல் ரக நாயை மாநகராட்சி ஊழியர்களை வரவழைத்து வலைவீசி பிடித்து நாய்கள் காப்பகத்தில் அடைத்தனர். பின்னர் போலீசார் நாயின் உரிமையாளர் பூங்கொடி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்கொடி மீது 304(a) என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பூங்கொடியையும் நாய் கடித்து உள்ளதால் அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பூங்கொடி சிகிச்சை முடிந்து கைது செய்யப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, நாய் அவரை எப்படி தாக்கி கடித்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், பூங்கொடி வளர்த்து வந்த பிட்புல் ரக நாயை அவர் முறையாக பராமரித்து அதற்கு தடுப்பூசி செலுத்தினாரா? வெளியில் அழைத்து வந்த போது நாய்க்கு முக கவசம் அணியப்பட்டு இருந்ததா? என்பதை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பிட்புல் நாய்  கடித்து ஒருவர் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.