டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே ரூ.19,239 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த அமர்வில் உறுப்பிர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர், இந்திய வங்கிகளில் ரூ.67,000 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள்(deposit) உரிமை கோரப்படாமல் கிடப்பில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பட்டியலில், பொதுத்துறை வங்கிகள் 87 சதவீத உரிமை கோரப்படாத வைப்புத்தொகையை வைத்திருக்கின்றன.
பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இதுபோன்ற வைப்புத்தொகைகளில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.19,239 கோடி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (ரூ.6,910.67 கோடி), கனரா வங்கி (ரூ.6,278.14 கோடி), பாங்க் ஆஃப் பரோடா (ரூ.5,277.36 கோடி) மற்றும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.5,104.50 கோடி) ஆகியவை அதிக அளவு உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளைக் கொண்ட பிற பொதுத்துறை வங்கிகளாகும்.
தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.8,673.72 கோடி மதிப்புள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகள் உள்ளன. அதிகபட்சமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை உள்ளன.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ.2,063.45 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
எச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1,609 கோடி மற்றும்
ஆக்சிஸ் வங்கியில் ரூ.1,360 கோடி மதிப்புள்ள வைப்புத்தொகைகள் உள்ளன.
ஒரு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் 10 ஆண்டுகளுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கில் உள்ள தொகை ‘செயல்படாத வைப்புத்தொகை’ என்று கருதப்படுகிறது.
இது பொதுவாக கணக்கு வைத்திருப்பவர் இறக்கும் போது நடக்கும். இந்த நிதிகள் 10 ஆண்டு வரம்பிற்குப் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்படும். பழைய கணக்குகளில் பணம் இருக்கிறதா என்பதை சரிபார்க்க, இந்திய ரிசர்வ் வங்கி UDGM (Unclaimed Deposits-Gateway to Access Information) என்ற மையப்படுத்தப்பட்ட இணையதள போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.
இந்த போர்டல் மூலம், பல்வேறு வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளை எளிதாகத் தேடலாம். இந்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், பழைய மற்றும் பயன்படுத்தப்படாத வங்கிக் கணக்குகளைச் சரிபார்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.