டில்லி

நாடு முழுவதுமாக அக்டோபர் மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1.72 லட்சம் கோடி என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2017-18-ம் நிதியாண்டில் மாதம் ஒன்றுக்கு சராசரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்குக் கீழ் இருந்து வந்தது.  கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்ட 2020-21-ம் நிதியாண்டுக்குப் பின்னர் விரைவாக வசூல் அதிகரித்து, 2022-23-ம் நிதியாண்டில் சராசரி வசூல் ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் கடந்த அக்டோபரில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது என இன்று அறிவித்துள்ளது.

இன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில்,

“இந்த ஆண்டு அக்டோபருக்கான ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.72 லட்சம் கோடியாக உள்ளது. இது 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்து 2-வது அதிக வசூல் ஆகும்.

உள்நாட்டுப் பரிமாற்றங்கள் (இறக்குமதி சேவை உள்பட) வழியே கிடைத்த வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 13 சதவீதம் அதிகம் ஆகும்.

எனவே 2023-24-ம் நிதியாண்டிற்கான சராசரி ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 11 சதவீதம் அதிகம்: ஆகும்”

என்று தெரிவிக்கின்றது.

மாதத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடிக்கு கூடுதலான ஜி.எஸ்.டி. வசூலை, தொடர்ந்து 8-வது மாதம் ஆக ஈட்டி சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு செப்டம்பருடன் அதாவது சென்ற மாதத்துடன்  ஒப்பிடும்போது, அக்டோபர் ஜி.எஸ்.டி. வசூலானது 5.71 சதவீதம் அதிகம் ஆகும்.