சென்னை: ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இடஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

ஆனால், இந்த தீர்ப்பின்படி மத்தியஅரசு நடந்துகொள்ளவில்லை. இதையடுத்து, மத்தியஅரசு மீது திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணையின்போது,  தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.