இஸ்லாமாபாத்: கர்தார்பூர் வரும் சீக்கியர்கள், பாஸ்போர்ட் எடுக்கவேண்டியது இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டியிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்து இருக்கிறது கர்தார்பூர் என்ற பகுதி. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், தமது கடைசி காலத்தை அங்கு கழித்ததாக கூறப்படுகிறது.

ஆகையால், அவரது நினைவாக, அங்கு குருத்வாரா ஒன்று அமைக்கப்பட்டு, அதனை வழிபடுவது, சீக்கியர்கள் தமது வாழ்நாள் கடமையாக கருதுகின்றனர். எனவே, இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் அங்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அந்த வழிபாட்டுத் தலத்தையும், இந்தியாவையும் இணைக்கும் வகையில் சாலை ஒன்று அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா வரும் 9ம் தேதி நடக்க உள்ளது. இந் நிலையில், கர்தார்பூர் குருத்வாராவுக்கு வரும் சீக்கியர்கள் இனி பாஸ்போர்ட் எடுக்க வேண்டியதில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: குருத்வாரா வந்து வழிபடும் சீக்கிய யாத்ரீகர்கள் 10 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு கட்டணமாக 20 டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 1,500) செலுத்த வேண்டும்.

இந்தியா வைத்த கோரிக்கைகளில் 2 ஏற்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து வருபவர்கள் பாஸ்போர்ட் கொண்டு வர வேண்டிய தேவை இல்லை. அதற்கு பதிலாக அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை வைத்து இருந்தால் போதும்.

கர்தார்பூர் வழித்தட திறப்பு விழா நவம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது. குரு நானக்கின் 550வது ஜெயந்தி தினமான நவம்பர் 12ம் தேதி நடக்கிறது. அந்த தேதிகளில், கர்தார்பூர் வரும் இந்திய யாத்ரீகர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றார்.