சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
சீமானுக்கு ஆதரவாக, அவரது முன்னாள் காதலியான நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரின் பேரில், மற்றொரு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ஹரி நாடாரை திருவான்மியூர் காவல்துறையினர் கைது செய்தனர். நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கில் சீமான் தூண்டுதலில் ஹரி நாடார், சதா ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும் அதனால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்
பின்னர் சிறைத்துறை நடைமுறைகளுக்குப் பின்னர் அவரை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட இருக்கிறார். அதைத்தொடர்ந்து, ஹரி நாடாரை  மூன்று நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்த பின்னர் சீமானிடமும் விசாரணை நடத்த திருவான்மியூர் போலீஸார் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்துடன் ஹரி நாடார் அளிக்கும் வாக்குமூலத்தில் சீமான் பெயரைக் குறிப்பிட்டாலும் சீமானுக்கு சிக்கல் ஏற்படக் கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சைலேந்திர பாபு  ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.