சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால்,  தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.  இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் உருவாகலாம். இதன் காரணமாக,  தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  மேலும்  தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் மிக கனமழை பெய்யவும்  வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (ஜூலை 19ம் தேதி) உருவாக வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோவையில் இன்று (ஜூலை 18) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 23-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.

இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.