சென்னை: மத்திய வங்கக்கடல் பகுதியில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.  இதனால் வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ள வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தி உள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 13) ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா நோக்கி நகரக்கூடும்.  பின்னர் படிப்படியாக வலுப்பெற்று, மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொறுத்து, வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை காரணமாக சாலைகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதன் காரணமாக, வங்கக்கடலில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகங்கள், மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்று இடி மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் ஆக., 18 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், சில இடங்களில், இடி மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.