சென்னை

வரும் 26 ஆம் தேதி அந்தமான் கடல் அருகே குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் பருவமழை தீவிரமாக இருந்தாலும், அக்டோபர் மாதம்  குறைவாக மழை பதிவானதால் இயல்பைவிட மழை குறைவாகவே உள்ளது. தற்போது தமிழகத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது.

நேற்று முன்தினம் அனேக இடங்களில் மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக 5 இடங்களில் மிக கனமழையும், 15 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் அதனையொட்டியுள்ள கேரள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

”இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நாளை  நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 

வரும் 26 ஆம் தேதி  அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.  26 ஆம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும்” 

எனத் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வாளர்கள் அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் இந்த தாழ்வுப் பகுதி சற்று வலுவிழந்த நிலையில் நகர்ந்து வந்தால், தமிழ்நாட்டுக்கு நல்ல மழை இருக்கும் என்றும், அதிலும் குறிப்பாகச் சென்னையில் அதிக மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.