திருவனந்தபுரம்: முல்லை பெரியாற்றில் புதிய அணை  கட்டுவோம் என  கேரள அரசு மீண்டும் ஆளுநர் உரையில் தெரிவித்து உள்ளது. இதற்கு தமிழ்நாடு எதிர்வினையாற்றாத நிலையில், சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

கேரள மாநில சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 25ந்தி) ஆளுநர் ஆரிப் முகமதுகான் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் சுமார் 2 நிமிடம் மட்டுமே உரையாற்றியதுடன், உரை முடித்துக்கொண்டு வெளியேறினார். இதைத்தொடர்ந்து கேரள சபாநாயகர், ஆளுநர் உரையை வாசித்தார்.

அதில், முல்லை பெரியாறு ஆற்றிங்கரையோர மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஆற்றில் புதிய அணை கட்ட திட்டமிட்டு உள்ளதாக கேரள அரசு தெரிவித்து உள்ளது.  சட்டப் பேரவை கூட்டத் தொடரில் வாசிக்கப்பட்ட கேரள  மாநில கொள்கை அறிக்கையாக, இடுக்கி மாவட்டத்தில் உள்ள 125 ஆண்டுகள் பழமையான முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்இ, கடந்த 2018 முதல் 2021 ஆண்டு வரையில் பருவமழை காலத்தில் கொட்டித் தீர்த்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கையும் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை கருத்தில் கொண்டு ஆற்றங்கரையோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பு கருதியும், தமிழ்நாட்டின் நீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டும் புதிய அணை கட்ட திட்டமிடப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய அணையின் கட்டுமானம், நவீன தொழில்நுட்பம் மற்றும் தற்கால கட்டுமானங்களின் நுட்பங்களை கொண்டும் கட்டமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பான அனைத்து இடங்களிலும் கேரள அரசு இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தமிழகத்துடன் இணக்கமான தீர்வுக்கு சாத்தியமான பின் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில அரசின் இந்த அறிவிப்பு தமிழக விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  முல்லை பெரியாறு அணை கடந்த 1895 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  இதன்மூலம் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. ஆனால், அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என கேரள அரசு பல ஆண்டுகளாக முரண்டு பிடித்து வருகிறது. முல்லைப் பெரியாறு அணையை தமிழக அரசு நிர்வகித்து வரும் நிலையில், அணை மிகவும் பாதுகாப்பாக உள்ளதாக தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.  மேலும், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இந்த நிலையில், கேரள மாநில அரசு மீண்டும் புதிய அணை குறித்து பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் கூட்டணி கட்சியான திமுக மற்றும் தமிழ்நாடு முதல்வர் முறையான கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்ய வேண்டும் என சமுக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.