சுயநலமில்லா மக்கள் தலைவன், பேரறிஞர் அண்ணா
அண்ணா நினைவு நாளையொட்டி நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசனின் முகநூல் பதிவு
நான்தான் என்ற நினைப்பில் வலம் வந்த தலைவர்கள் மத்தியில் நாம் என்ற நினைப்போடு இருந்தவர்.
அதனால்தான் 1949ல் அவர் திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தபோது, ஒற்றைத்தலைவனாக இல்லாமல், அறிவுசார் நண்பர்களை ஒருங்கிணைத்து ஒரு படையை உருவாக்கி அதற்கு தளபதி என திகழ்ந்தவர்.
சொல்லின் செல்வர் சம்பத், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர், ஒரு பக்கம் தயார் செய்தவர்,
இன்னொரு பக்கம் பாமர மக்களிடம் கலைவடிவில் பேசுவதற்கு நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி, லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர், மக்கள் திலகம் எம்ஜிஆர் என திரைப்போராளிகளை அரவணைத்து உருவாக்கிவிட்டார்.
மாணவர்களும், சாமான்ய மக்களும் சமுதாயத்தின் முக்கிய அங்கம் என்று கருதியதால்தான், இரண்டாம்கட்ட தலைவர்களை வலுவான அளவில் அவரால் உருவாக்க முடிந்தது. அண்ணா கட்சி ஆரம்பித்தபோது, எதிரே இருந்தவர்கள் சாமானியர்கள் அல்ல. மத்தியில் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித்தந்த ஜவஹர்லால் நேரு போன்றோர், மாநிலத்திலோ, பெருந்தலைவர் காமராஜ் போன்றோர். இவர்களுக்கு எதிராக அந்த காலத்தில் அரசியல் இயக்கத்தை துவக்கி அதனை நடத்துவது சாதாரண காரியமல்ல.
களத்திற்கு சென்றால்கூட மிட்டா மிராசுகளையும் பெரும் பணக்கார காங்கிரஸ்காரர்களையும் எதிர்கொள்ளவேண்டிய கடுமையான சூழல்.  இப்படிப்பட்ட நிலையில் அண்ணா, தனது தம்பிகளோடு அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். வெறுமனை எதிர்ப்பு கோஷமிடுவதைவிட, ஆட்சி அதிகாரம் கையில் வந்தால் மட்டுமே சமூகத்தில் மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரமுடியும் என்பதை திடமாக நம்பினார். அதே வழியில் பயணமும் செய்தார்.
1957ல் வெறும் பதினைந்து இடங்களை பிடித்த திமுக, 1962ல் 50 இடங்களை பிடித்து தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இந்த வெற்றிகளை தனக்கு உரியது என்று மட்டுமே அண்ணா கருதவல்லை. தம்பிமார்களால் கிடைத்த கூட்டு வெற்றி என்று நம்பினார்.  1967ல், இந்தியாவில் முதன்முறையாக, ஒரு மாநில கட்சி பெரும்பான்மையோடு ஆட்சியில் அமர்ந்து புதிய சாதனை படைத்தது. அது அண்ணாவின் திமுக.தான். அப்போதும் அவருக்கு தலைக்கனம் வந்துவிடவில்லை.
காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை வீட்டுக்கு அனுப்பி இவ்வளவு சீக்கிரம் மக்கள் நம்மை ஆட்சியில் அமரச்செய்வார்கள் என்று நினைக்கவேயில்லை. மக்கள் நம் மீது வைத்திருக்கும் இந்த நம்பிக்கைதான், மேற்கொண்டு இவர்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என் லேசான அச்சத்தை தருகிறது என்று வெளிப்படையாக தனது தம்பிமார்களிடம் பகிர்ந்துகொண்டவர் அண்ணா.
‘’பதவியேற்ற 20 நாட்களிலேயே முதலமைச்சர் சீட்டில் நாக்கு தள்ளுகிறது, எப்படித்தான் 20 ஆண்டுகள் இந்த காங்கிரசார் தள்ளினார்களோ?’’ என்று சொன்னதுதான் அண்ணாவின் நிஜமான இயல்பு..
துப்பாக்கியால் சுடப்பட்டு மக்கள் திலகம் மருத்துவமனையில் மறுபிறவி எடுத்துக்கொண்டிருந்த நேரம் ஆட்சியை பிடித்து அமைச்சரவை பட்டியல் தயாரிக்கும்போது, முக்கிய தலைவர்களையும் தாண்டி நாவலர் சகோதரர் இரா, செழியன் மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆரிடமும் சம்மதம் பெற விரும்பினார் அண்ணா.
அனைவரையும் மதிக்கும் மாண்புக்கு அடையாளம் அது. காரணம், அண்ணாவுக்கு தெரியும், யார் யார் மூலம் திமுக என்ற இயக்கத்திற்கு எவ்வளவு பலன் கிடைக்கிறது என்று.  அதே நேரத்தில் எதிர்கருத்து வைக்கவேண்டிய கட்டாயம் வந்தால் அவர் பின்வாங்கியதே இல்லை.
நாட்டின் சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைபிடிக்கவேண்டும் என்று குருநாதர் பெரியார் சொன்னபோது அதை கருத்து மோதலால் எதிர்கொண்டவர்..   கல்வியும் அதனைத்தருகின்ற தாய்மொழியும் எல்லாவற்றையும்விட முக்கியமானவை என்று தெளிவாக இருந்தவர் அண்ணா,
ஒரு இனத்தின் முக்கியவேர், மொழி என்று கருதியே நாட்டின் அனைத்து இனங்களின் மொழிகளையும் தேசிய மொழியாக அறிவிக்கவேண்டும் என்று அவர் வலிறுயுத்தினார்.
அண்ணாவின் சிந்தனை, மாநிலத்தின் தொழில் வளர்ச்சி என்பதை காட்டிலும் சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளை ஒழிப்பது, சாமான்யர்களின் வறுமையை போக்குவது, அதிகார மையங்களில் விளிம்பு நிலை மக்களையும் அமரச்செய்வது போன்றவற்றில்தான் அதிகமான தாக்கத்தை கொண்டிருந்தது.
சீர்திருத்த திருமணம், கலப்புமணத்திற்கு ஊக்குவிப்பு, இருமொழிக்கொள்கை, ரூபாய்க்கு படி அரிசி ( வாக்குறுதிப்படி, 3 படி), மாநில சுயாட்சி என அண்ணாவின் பாதை வித்தியாசமானதாக இருந்தது..
பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை ஒன்றுபட்டு கட்டிக்காப்பது அதன் பன்முகத் தன்மைதான் என்பதை முழுவதுமாக நம்பியவர்..
இனத்தையும் தமிழ் மொழியையும் உயிராய் நேசித்தவர்.. தமிழ் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அத்தனை பிராந்திய மொழிகளும் அழிந்து போகாமல் கட்டிக்காக்க வேண்டும் என்று விரும்பியவர்..
ஆட்சியை பிடித்ததுமே, மெட்ராஸ் ஸ்டேட் என அழைக்கப்பட்ட மாநிலத்தை அழகுற மொழியின் பெயராலேயே தமிழ்நாடு என்று மாற்றும் அளவுக்கு தமிழையும் தமிழ் மண்ணையும் நேசித்தவர் அண்ணா என்ற தலைவன்.
காஞ்சிபுரத்தில் ஒரு நெசவாளி குடும்பத்தில் பிறந்த, உருவத்தில் குள்ளமாக இருந்த அண்ணாதான், நாடே வியந்த நேரு போன்ற தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தில் சிம்ம சொப்பமனமாக திகழ்ந்தார். அவரின் வாளினும்கூரிய பேச்சாற்றலுக்கு முன்னே டெல்லி தலைவர்கள் வாயடைத்துபோனார்கள்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருவை எதிர்கொண்ட போது “”நீங்கள் கட்டிமுடிக்கப்பட்ட கோட்டை நான் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்” என்று தன்னடக்கத்தோடு போரிடவும் அண்ணாவால் முடிந்தது..
அதிகம் பேரால் பேசப்படும் இந்திதான் இந்த நாட்டின் தேசிய மொழி என்று டெல்லி அறிவிக்க முயன்ற போதெல்லாம் தடைக்கல்லாய் திகழ்ந்தவர் அண்ணா..   இந்தி திணிப்பை கண்டுகொள்ளாமல் விட்டால் அது தமிழின் குரல்வளையை கடித்து குதறிவிடும் என்று தீர்க்கமாக நம்பியவர் அண்ணா..அதனால்தான் இந்தி திணிப்பை விரட்டி விரட்டி வேட்டையாடச் சொன்னார்.
இந்தியா முழுக்க பள்ளிகளில் இங்லீஷ் கற்பிக்கப்படும்போது அது ஏன் ஒட்டு மொத்த நாட்டுக்கும் தொடர்பு மொழியாக இருக்கக்கூடாது? உலகத்தொடர்புக்காக இங்கிலீஷையும் உள்நாட்டு தொடர்புக்காக இந்தியையும் தமிழர்கள் ஏன் கற்கவேண்டும்?
பெரிய நாய் நுழைவதற்காக பெரிய கதவும் சிறிய நாய்க்காக சிறிய கதவும் என இரண்டு கதவுகளையா வைப்போம்? பெரிய கதவை வைத்துவிட்டால் அதில் சிறிய நாயும் பெரிய நாயும் வந்துபோகப்போகின்றன என்று சொன்னவர் அறிஞர் அண்ணா…
பெரும்பான்மைக்குத்தான் முதன்மை என்றால் இந்த நாட்டில் எண்ணிக்கையில் அதிகம் உள்ள எலியை தேசிய விலங்காக அறிவிக்காமல் புலியை அறிவித்தது ஏன் என்று வினா எழுப்பியவர்.. காக்காயை தேசிய பறவையாக அறிவிக்காமல் மயிலை அறிவித்தது ஏன் என்றும் கேட்டவர்..
இந்தியாவுக்குள் தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும் உலக அளவில் அதன் பெருமை தனியாக நிலைநாட்டப்பட வேண்டும் என்று கனவு கண்டு அதற்காகவே வாழ்நாளெல்லாம் உழைத்தவர்..
ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்துக்கொண்டால் நாசமே மிஞ்சும் என்று எச்சரித்த தீர்க்கதரிசி..
தமிழினத்தின் மாண்பு மங்கிப்போய்விடக்கூடாது என்று மாநில சுயாட்சியை வற்புறுத்தி அதற்கான உரிமை களை மீட்க போராடியவர்.. அதனால்தான் இன்று தமிழகம் பல விதங்களில் முன்னேறியி ருக்கிறது..   மாநில சுயாட்சி அதிகாரத்தை கோட்டை விட்டதால்தான் இன்னும் பல மாநிலங்களை மத்திய அரசு தன் கோரக்கரத்தால் அடக்கியாண்டு கொண்டிருக்கிறது அதிலும் வடகிழக்கு மாநிலங்களின் கதை இன்னமும் பரிதாபம்.
அவ்வளவு ஏன், நம்ம புதுச்சேரியை எடுத்துக்கொள்ளுங்கள்.. அருகில் உள்ள திண்டிவனத்திலும் கடலூரிலும் காங்கிரஸ் கட்சிக்கு பலமே இருக்காது..ஆனால் புதுச்சேரியில் பலமாக இருக்கும்..
தமிழ்கத்தில் பெரிய இயக்கங்களாக திகழும் திமுகவும் அதிமுகவும் புதுச்சேரியில் மட்டும் மூச்சு வாங்குவது ஏன்? ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மத்திய அரசு வைத்திருப்பதுதான் இதற்கு முக்கிய காரணம்..
ஒரு கான்ஸ்ட்டபிளைக்கூட புதுச்சேரி முதலமைச்சரால் ஒன்றும் செய்துவிடமுடியாது..எல்லாமே மத்திய உள்துறை அமைச்சகம்..   மத்தியஅரசு போடும் பிச்சையை பொறுத்தே புதுச்சேரிக்கு நிதியாதாரம்.. இப்படியிருக்கும்போது எவன் மாநில கட்சிகளை நம்பி போவான்..
இந்த அவலங்களையெல்லாம் பார்க்கும்போதுதான் மாநில சுயாட்சியை வலியுறுத்தி பல விஷங்களில் நாட்டிற்கே முன்னோடியாக திகழ்ந்த அண்ணாவின் பெருமை புரியவரும்..
அண்ணாவிற்கு பின்னால் வந்தவர்களில் சிலர் அவரின் பற்றற்ற பாதையை அப்படியே பின்பற்றியிருந்தால் கொள்ளைக்கார அரசியல்வாதிகள் என்ற வர்க்கம் அவ்வளவாக உருவாகியிருக்காது..
தமிழினத்தின் பெருமையை உயிர் மூச்சாக சுவாசித்ததால்தான் எதையும் துணிச்சலுடன் பல சம்பிரதாயங்களை அவரால் உடைக்கமுடிந்தது..  அண்ணா முதலமைச்சராக பதவியேற்க அவரது நுங்கம் பாக்கம் வீட்டிலிருந்து ராஜாஜி ஹாலுக்கு ரெடியாகிறார்.  நம்மையும் அழைத்துச் செல்வார் என்று மனைவி ராணி மற்றும் குடும்பத்தினர் தயாராக இருக்கின்றனர்.
ஆனால் அண்ணாவோ, யாரையும் அழைக்காமல் ஒரு பழைய கைத்தறி துண்டை தோளில் போட்டுக்கொண்டு காரில் ஏறி, பதவியேற்புக்கு புறப்பட்டு போய்விடுகிறார்  முதலமைச்சர்கள் பதவியேற்பதை அந்த அரங்கில் உள்ளவர்கள் மட்டுமே அன்றைக்கு கேட்கமுடியும்- ஆனால் அண்ணா முதலமைச்சராக பதவியேற்கும்போது, ”விழா அரங்கின் வெளியே கட்டுங்கடா ஒலிபெருக்கிகளை. என் பதவி பிரமாணத்தை என் சமான்ய மக்களும் கேட்கட்டும்” என்று உத்தரவு போட்டார்..
தன்னுடன் இருந்தவர்கள் பிரிந்து போய் எதிர் அரசியல் செய்ய ஆரம்பித்த போதும் கூட அவர்களின் தனித்திறமையை கேவலப்படுத்தாமல் நாகரிகமாக” மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு” என்றார்.   நாங்கள் சொல்லளவில்தான்.. ஆனால் அண்ணாதுரையோ அதை சாதித்தே காட்டியவர் என்று குருநாதர் தந்தை பெரியாரே பாராட்டும் அளவிற்கு தன்னை வடிவமைத்துக் கொண்டவர்..
எவனும் எவனுக்கும் அடிமையில்லை என்ற சித்தாந்தத்தில் சாமானிய மக்களுக்கும் கல்வி அரசு வேலைவாய்ப்பு, ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று சொல்லி சாதித்தும் காட்டியவர்..
வண்ணான் வீடு, கொலுத்துகாரன் வீடு, வெட்டியான் வீடு என்றெல்லாம் அழைக்கப்பட்ட வீடுகள் இன்று இஞ்சினியர் வீடு, டாக்டர் வீடு, வாத்தியார் வீடு என்று உருமாற்றம் பெற்றிருக்கின்றன.
தான் கண்ட கனவை அண்ணா நினைவாக்கி இட்ட அடித்தளத்தால் கிடைத்த மாற்றங்கள் இவை.
இன்று அண்ணாவைப் பார்த்து அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எள்ளி நகையாடுவோருக்கெல்லாம், அரசியல் பாதையை எப்படி போட வேண்டும் என்று அவரே பாடமாக அமைந்து போனார்..
நான் செய்துவிட்டு போகிற விஷயங்களை நீங்கள் மாற்ற முடியாது அவ்வளவு ஏன் அவற்றின் மீது நீங்கள் கை வைக்கவே பயப்படுவீர்கள். அப்படியென்றால் அதுவரை இந்த அண்ணாதுரைதான் ஆட்சிசெய்கிறான் என்று அர்த்தம் என்று பொட்டிற் அறைந்தார்போல் சொன்னவர் அண்ணா,
என்ன ஆச்சர்யம், அரை நூற்றாண்டை கடந்த பிறகும் 55 ஆண்டுகளாக அண்ணாவின் தாக்கமே தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் தொடர்கிறது..
ஏகப்பட்ட சாதனைகளை படைப்பார் என்று நம்பியிருந்த நிலையில் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த ஒன்றரை ஆண்டுக்குள் அவர் காலமாகிவிடுவார் என்று யாருமே கனவிலும் நினைக்கவில்லை..
அவரின் இறுதி ஊர்வலத்தில் லட்சோப லட்சோபம்பேர் பங்கேற்று, சாமான்யனான அண்ணா என்ற பெயரை, உலகமே வியப்பாக கேட்கும்படி செய்தார்கள் என்றால் அந்த தலைவனை மக்கள் எந்த அளவுக்கு நேசித்திருக்கவேண்டும்..?
சுயநலமே இல்லாமல் மக்களுக்காகவே வாழ்வதுதான் உண்மையான அரசியல் பண்பு என்று நிரூபித்துவிட்டுபோனவர் அறிஞர் அண்ணா. அவர் வழி நடந்தவர்கள் அவருக்கு நிகராக புகழ்பெற்றார்கள்,
இனத்தை, மொழியை காக்கக்கூடிய மாநில சுயாட்சியை போதித்த ஒப்பற்ற தலைவன் அண்ணாவின் 52 வது நினைவு தினம் இன்று.