காத்மாண்டு

நேபாள நாட்டின் துணைப் பிரதமர் உபேந்திர யாதவ் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

நேபாள நாட்டில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) கட்சியில் உட்கட்சி பிரச்சினை காரணமாக கட்சி இரண்டாக உடைந்தது. இக்கட்சியின் தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக, கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழுவினர் போர்க்கொடி தூக்கினர்.

பிறகு  இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தனர்.தக்கள் தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். தேர்தல் ஆணையம் ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவு செய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.

இன்று நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அவர் பிரசண்டா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார்

275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபையில் (நாடாளுமன்றம்) மெஜாரிட்டிக்கு 138 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணியில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யு.எம்.எல்.)- 77, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் சென்டர்)-32, ராஷ்டிரிய சுதந்திர கட்சி-21, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஜனதா சமாஜ்பதி கட்சி-7, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஐக்கிய சோசலிஸ்ட்)-10 ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 147 உறுப்பினர்கள் உள்ளனர்

[youtube-feed feed=1]