சண்டிகர்:  ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள  பஞ்ச்குலா நகரில் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

90 தொகுதிகளைக்கொண்ட ஹரியானாவில்  சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 5ம் தேதி நடந்தது.   இந்த வாக்குகள்   அக்டோபர் 8ந்தேதி  காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   இறுதியில்,  பாரதிய ஜனதா கட்சி 48 இடங்களில் வெற்றி பெற்றது.  காங்கிரஸ் கட்சி 37 இடங்களிலும்,   சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் பாஜக 3வதுமுறையாக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி உள்ளது. மாநிலத்தின் முதல்வராக மனோகர் லால் கட்டார் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக நயாப் சிங் சைனி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில்,  நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை அடுத்து புதிய அரசு வரும் 15ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மாநில முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனியை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரோடு சிலர் அமைச்சர்களாக பொறுப்பேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இதனால் வரும் 15 ஆம் தேதி பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.