சென்னை: ‘இல்லம்தோறும் தேசிய கொடி’ திட்டத்தின்படி, ஒவ்வொரு வரும் தங்களது இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்   பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ள நிலையில்,  நாடு முழுவதும் உள்ள அஞ்சல் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.

சென்னையில்,   சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை உள்பட பல்வேறு தபால் நிலையிங்களில்,  தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

 சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த ஆண்டைபோலவே ‘இல்லம்தோறும் தேசிய கொடி’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், தேசிய கொடிக்கு முன்பு செல்பி எடுத்து அதை https://harghartiranga.com என்ற இணையதளத்தில் பதிவிடுமாறும் தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவிடுபவர்களுக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ‘இல்லம் தோறும் தேசிய கொடி’திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தேசிய கொடி விற்பனையை அஞ்சல்துறை தொடங்கி உள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய  சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தின் தலைமை அஞ்சல் தலைவர் ஸ்வாதி மதுரிமா, சுதந்திர தினத்தை முன்னிட்டு அஞ்சல் நிலையத்தில் தேசியகொடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கொடியின் விலை ரூ.25. தேசிய கொடி 50 செ.மீட்டர் அகலமும், 75செ.மீட்டர் உயரமும் கொண்டது. பளபளப்பான துணியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேசிய கொடி அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும். வரும் 14-ம் தேதி வரை இந்த விற்பனை நடைபெறும்.

மேலும், ஆன்லைன் மூலமாகவும் (www.epostoffice.com) முன்பதிவு செய்து பெறலாம். அவ்வாறு முன்பதிவு செய்தவர்களுக்கு அஞ்சல் ஊழியர்கள் அவர்களது முகவரிக்கு சென்று தேசிய கொடியை விநியோகம் செய்வர்.

அரசு, தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவை தங்களுக்குத் தேவைப்படும் கொடிகளை (பல்க் புக்கிங்) ஆன்லைன் மூலமாகவும், தபால் நிலைய கவுன்ட்டர்களில் நேரில் சென்றும் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.