சசிகலாவின் கணவா் நடராஜனின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியரும்,  சசிகலாவின் கணவருமான நடராஜன் நெஞ்சுவலி காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அபாய கட்டத்தில் இருந்த நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளா் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர்,  நடராஜனை சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடராஜனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நுரையீரல் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும்  அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.