நாகை: நாகப்பட்டிணத்தில் இருந்து  இலங்கைக்கு செல்லும் வகையில் பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை (பிப்ரவரி: 12-ம் தேதி)  முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு  பயணிகள் கப்பல் சேவை கடந்த சில ஆண்டுகளாக தொடங்குவதும், பின்னர் பயணிகள் கூட்டம் இல்லாததால், அதை நிறுத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2023ம் ஆண்டு, ஆகஸ்ட் 16ம் தேதி அன்று நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து தொடங்கியது. சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை இந்த்ஸ்ரீ ஃபெர்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தினசரி இயக்குவதாக அறிவித்து பயணித்தது. ஆனால், இதற்கு மக்களிடைய வரவேற்பு இல்லாததால், அந்த சேவை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து,  2023ம்ஆண்டு  அக். 10-ம் தேதி முதல் மீண்டும்  பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.  செரியபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள்  கப்பலில் பயணிக்க பயணிகளுக்கான கட்டணம் 18% ஜிஎஸ்டி வரியுடன் ரூ.6,500 என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இதை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  நாகை – இலங்கை இடையிலான கப்பல் சேவை 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி   கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் தினசரிக்கு பதிலாக வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயக்க கப்பல் போக்குவரத்து நிறுவனம் தீர்மானித்து இயக்கியது. ஆனால், அதிலும் போதிய அளவு பயணிகள் இல்லாததால்,. கப்பல் சேவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இநத் நிலையில், தற்போது 4வதுமுறையாக மீண்டும்,  நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு  பயணிகள் கப்பல் சேவை  தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை (பிப்ரவரி 12ம் தேதி) மீண்டும் சேவை தொடங்க இருப்பதாகவும்,  செவ்வாய்க் கிழமை தவிர்த்து மற்ற அனைத்து நாட்களிலும் கப்பல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.