கதிர்காம பாலதண்டாயுதபாணி திருக்கோயில்,
கைவிளாஞ்சேரி,  சீர்காழி, நாகப்பட்டினம் மாவட்டம்.

தல சிறப்பு :

கோயில் மேற்கு பார்த்து அமைந்துள்ளது இங்குள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை செய்யப்படுகிறது. இது எங்குமில்லாத சிறப்பம்சமாகும்.

பொது தகவல் :

வண்ண முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்தால் மணிமண்டபமும், மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தின் நடுவே பிரார்த்தனை தீபம். பீடம், மயில் இவற்றோடு சிந்தாமணி விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்துள்ள அர்த்தமண்டப நுழைவாயில் சிற்றம்பல விநாயகர், பேரம்பல விநாயகர் என இரட்டை கணபதிகள் அருள்பாலிக்க, கருவறையில் கதிர்காம பாலதண்டாயுதபாணி, நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கிறார். மகாமண்டபத்தில் நால்வர் மற்றும் அருணகிரி நாதர் உள்ளனர். வடக்கில் நடராஜர், சிவகாமி, வேணுகோபால கிருஷ்ணன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். முறாகப்பெருமானின் உற்சவத்திருமேனி தனி சன்னிதியில் உள்ளது. கிழக்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். சமீபத்தில் குடமுழுக்கு கண்டுள்ளது இக்கோயில்,

பிரார்த்தனை :

இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானிடம் திருமணம் நடக்க குழந்தை வரம் கிட்ட, வழக்குகளில் வெற்றி பெற, வெளிநாடு செல்ல, குடும்ப ஒற்றுமைக்காக என வேண்டிக் கொண்டு பலன் பெற்ற பக்தர்கள் ஏராளம்.

நேர்த்திக்கடன் :

பிரார்த்தனை நிறைவேறியதும் மகாமண்டப மத்தியில் உள்ள பிரார்த்தனை விளக்கில் உள்ள 155 திரிகளிலும் தீபமேற்றி வழிபடுகின்றனர் பக்தர்கள்.

தலபெருமை :

முருகனது பீடத்தின் கீழ் நூதன முறையில் யந்திர பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஜல யந்திரம் என்கிற இந்த ஆற்றல் மிக்க யந்திரம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது.

தல வரலாறு :

சித்தம் இறைபால் வைத்து நித்தம் தவம் செய்யும் சித்தர்கள் சித்தியான பின்னர் அந்த இடம் புனிதம் பெற்று, வேண்டும் பக்தர்களுக்கு வரம் தரும் தலங்களாக விளங்குவது உண்டு அந்த வகையில் சீர்காழியில் கதிர்காம சுவாமிகள் என்ற சித்தர் அமைத்த முருகன் கோயில் ஒன்று கைவிளாஞ்சேரி பகுதியில் உள்ளது. தமது பன்னிரண்டாம் வயதில் ஞானானந்தகிரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்று அவரோடு இலங்கை கதிர்காமம் சென்று முருகனை வேண்டி தவம் செய்து தரிசனம் பெற்றவர் கதிர்காமம் சுவாமிகள். இவர் தென்னிந்தியா வந்தபோது சீர்காழி உப்பனாற்றங்கரையில் தங்கினார். 1925-ம் ஆண்டு, பிட்சை எடுத்தே இந்தக் கோயிலைக் கட்டிய அவர், இங்கே வரும் உப்பாற்றின் நீரை முறுகனின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்த, அதன்பிறகே இவ்வாற்றின் நீர் உப்புத்தன்மை நீங்கி, சுவையான நீரைக் கொண்டதாக மாறியது. இங்கு அருளும் முருகனை கதிர்காம பாலதண்டாயுத பாணி என்றே அழைக்கின்றனர் பக்தர்கள். பிரதான சாலைக்கு சற்றே உள்ளடங்கி, மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது கோயில்.

திருவிழா :

இங்கு கந்தசஷ்டி ஆறு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரம் அன்று 108 பால்குட அபிஷேகம் மூலவருக்கு நடைபெறுகிறது. வைகாசி விசாகத்தன்று முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை நடைபெறுகிறது. அந்தப் பழங்களை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகின்றனர். மாத சஷ்டிகளில் மூலவருக்கு அவல் பாயசம் நைவேத்யம் செய்யப்பட்டு, அதை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்னறர். மாத கார்த்திகை நாட்களில் சரவண ஹோமம் நடைபெறுகிறது.

சிறப்பம்சம் :

இங்குள்ள முருகப்பெருமானுக்கு மாம்பழ அர்ச்சனை செய்யப்படுகிறது. இது எங்குமில்லாத சிறப்பம்சமாகும்.

இருப்பிடம் :

நாகை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் கைவிளாஞ்சேரியில் உள்ளது இந்த கோயில்