ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கலை முன்னிட்டு கடந்த 9ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரிலீஸானது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படத்தை ரசிகர்கள் தர்பார் திருவிழாவாக கொண்டாடினர்.

படம் வெளியாகி 4 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட…

ஆனால் படம் நஷ்டமடைந்ததாக கூறி நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க விநியோகஸ்தர்கள் வருகை தந்துள்ளனர். ரூ.65 கோடி கொடுத்து தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை சந்திக்க அவர்கள் முயற்சி செய்தனர். மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

இந்நிலையில் ‘தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறும் திரைப்பட விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு தரக் கோரி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.