மும்பை
மும்பை உயர்நீதிமன்றம் ஒரு பெண்ணிடம் “ஐ லவ் யு” எனச் சொல்வது பாலியல் வன்கொடுமை இல்லை என அறிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்த 17 வயது சிறுமியை 35 வயது வாலிபர் ஒருவர் கையை பிடித்து ‘ஐ லவ் யூ’ சொன்னதாக தெரிகிறது. சிறுமி இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வாலிபரை கைது செய்து இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
நாக்பூர் செசன்ஸ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட வாலிபருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடந்த 2017-ம் ஆண்டு தீர்ப்பு அளித்ததை எதிர்த்து அந்த நபர் நாக்பூர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவை நீதிபதி ஊர்மிளா ஜோஷி விசாரித்து வந்தார். நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பில்,
”இந்த வழக்கில் ‘ஐ லவ் யூ’ என்று வாலிபர் தனது உணர்வை வெளிப்படுத்தியதன் பின்னணியில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த சூழலும் இல்லை. தகாத முறையில் தொடுதல், வலுக்கட்டாயமாக ஆடைகளை கழற்றுதல், அநாகரிகமான சைகைகள் செய்தல் அல்லது பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது போன்றவை தான் பாலியல் நோக்கமாக இருக்க முடியும்.
இந்த வழக்கில் ‘ஐ லவ் யூ’ என்று சொன்னதில் பாலியல் நோக்கம் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே இது மானபங்கம் அல்லது பாலியல் வன்கொடுமையின் கீழ் வராது. யாராவது ஒருவர் வேறொரு நபரை காதலிப்பதாக கூறினால் அல்லது தனது உணர்வுகளை வெளிப்படுத்தினால், அதில் பாலியல் நோக்கம் இருக்க வேண்டியதற்கான அவசியம் இல்லை. எனவே வாலிபருக்கு கீழ் கோர்ட்டு விதித்த சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
என்று கூறப்பட்டுள்ளது.