டெல்லி: கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும், பல்வேறு வழக்குகளை விசாரித்துள்ள விசாரணை நீதிமன்றங்கள்  165  குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகளை வழங்கி யிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இது கடந்த 20 ஆண்டுகளில், அதாவது 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு அளிக்கப்பட்ட அதிகபட்ச மரண தண்டனை என தெரிவித்துள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் திட்டம் 39என் கீழ், இந்தியாவில் மரண தண்டனைகள் – ஆண்டு புள்ளிவிவரம் 2022 என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும், விசாரணை நீதிமன்றங்கள் பல்வேறு வழக்குகளை விசாரித்து, குற்றவாளிகளுக்கு 165 மரண தண்டனைகளை வழங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை விசாரணை நீதிமன்றங்கள்தான் விதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், அவை குற்றவாளிகளின், மேல்முறை யீட்டு  மனுக்களால், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களால்   மரண தண்டனைகள்  குறைக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மரண தண்டனை தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் 11 வழக்குகளிலும் உயர் நீதிமன்றங்கள் 68 வழக்குகளிலும் தீர்ப்பளித்துள்ளன. “உயர்நீதிமன்றங் கள் தீர்ப்பளித்த 68 வழக்குகளில், 101 கைதிகள் உட்பட, மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது, 48 குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 43 குற்றவாளிகள் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

அதுபோல மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டிலிருந்து 40% அதிகரித்துள்ளது என்றும் என்று தெரிவித்துள்ளதுடன், 2022ஆம் ஆண்டின் இறுதிவரை, மொத்தமாக 539 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது,  2016 க்குப் பிறகு ஒரே வழக்கில் அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது. 6 வழக்குகள் விசாரணை நீதிமன்றத்திற்கே மீண்டும் அனுப்பப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 2022ம் ஆண்டில் அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட ஆண்டாக மாறியதற்கு முக்கிய காரணம் ஒரே ஒரு வழக்குதான். குண்டுவெடிப்பு வழக்கில் அகமதாபாத்தில் 38 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் அதிகபட்ச மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டாக மாறியது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் அதிகமான (51.28 சதவீதம்) வழக்குகள் பாலியல் குற்றங்கள் தொடர்பானவை என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

அதுபோல, சில வழக்குகளில் அரிதான நிகழ்வுகளும் நடெபற்றுள்ளன. கொள்ளை மற்றும் கொலை வழக்கில் கைதி ஒருவரின் ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக மும்பை உயர் நீதிமன்றம்,  உயர்த்தியது. இதுபோல தண்டனை உயர்த்தப்படுவது 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டாவது முறை என்றும் சுட்டிக்காட்டி உள்ளது.