ஜெனிவா:
குரங்கம்மை நோய் பரவல் பொது சுகாதார அபாயத்தை அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாலில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970 ஆம் ஆண்டு தான் முதன் முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோயை போல குரங்குகளிடம் பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கபடுகிறது.

வழக்கமாக, மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் பரவக்கூடிய நோயாகிய இந்த குரங்கு அம்மை நோய், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் பரவி வருவதன் காரணம் குறித்து ஆய்வு நடத்த உலக சுகாதார அமைப்பு உத்தரவிட்டது. இதுவரை 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கூறிய உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் சில்வி பிரையன்ட், மக்கள் அச்சப்படும் அளவுக்கு குரங்கம்மை வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று கூறினார்.

தற்போது வரை 24 நாடுகளில் 400க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறீனார்.