டில்லி:

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத  சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முயன்று வருகிறது. இதற்கிடையில், சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு டில்லி உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து டிவிட் போட்டுள்ளார்.

அதில், ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முகெலும்பில்லாத சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்றும், அதிகாரத்தை  இந்த அளவுக்கு இழிவாகவும், தவறாகவும்  பயன்படுத்துவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறு பதிவிட்டு உள்ளார்.